விழுப்புரம், டிச. 28: விழுப்புரம் அருகே தொரவி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எஸ்பி ஜெயக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் வசிக்கும் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த வாலிபரும், ஊர் பகுதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதனால் கடந்த 24ம் தேதி ஊர் தரப்பில் அம்மன்கோயிலில் கூட்டம் போட்டு வீட்டுக்கு ஒரு ஆள் வரவழைத்து பேசினார்கள். கூட்டத்தில் இனிமேல், ஆதிதிராவிடர் மக்களோடு பேசக்
கூடாது. விவசாய வேலைக்கு அழைக்கக்கூடாது. மேலும் குடிநீர் வழங்கக்கூடாது. மின்விளக்கு வசதியில்லாமல் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் காலனி பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டம் தீட்டி வருவது தெரியவந்துள்ளது.