தேன்கனிக்கோட்டை, டிச.21: தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டில் முகாமிட்டுள்ள யானைகள், 3 குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனப்பகுதியில் முகாமிட்டு கடந்த இரண்டு மாதங்களாக பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்து வருகின்றன. ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 70 யானைகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படடன. இந்த யானைகள் தாவரகரை, மலசேனை, கெண்டிகானப்பள்ளி, ஒசட்டி, கேரட்டி, ரங்கசந்திரம், சாமநஞ்சபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இதில் தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் தோட்டங்கள், ராகி, துவரை, அவரை பயிர்கள் பெருத்த சேதமடைந்தன. தொடர்ந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டத்தை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்; சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியை முடுக்கி விட்டனர்.