ஊத்தங்கரை, டிச.21: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன்(35). விவசாயியான இவர், காமராஜர் நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், சண்டைக்கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, ஆனந்தன் சென்று பார்த்துள்ளார். அப்போது, தெருநாய்கள் சண்டைக்கோழிகளை வேட்டையாடி கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே, சுதாரித்துக்கொண்டு நாய்களை விரட்டியடித்தார். தெருநாய்கள் கடித்து குதறியதில், 20 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்ததை கண்டு கண்ணீர் வடித்தார். இதையடுத்து, இறந்த கோழிகளை எடுத்துக்கொண்டு டவுன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த ஆனந்தன், அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.