பெரம்பலூர்,டிச.19: பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப்பரவசத்தில் கோஷமிட்டு வழிபட்டனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, பெரம்பலூரில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதன கோபால சுவாமி கோயிலில் நேற்று காலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. காலை 6மணிக்கு பரமபதவாசல் எனப்படும் கோயிலின் பிரமாண்ட கதவுகள் திறக்கப்பட்டு மதனகோபால சுவாமி சிறப்பு தரிசனம் கொடுத்தார். இதற்காக அதிகாலை 4மணிமுதல் வாசலின் முன்பு திரண்டு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா, ரெங்கா, ரெங்கா என பக்திப்பரவசத்தில் கோஷமிட்டு வழிபட்டனர். பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை, எளம்பலூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதனகோபால சுவாமியை தரிசித்து அருள்பெற்று சென்றனர்.