அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் நாளை உறுப்பினர் சேர்க்கை முகாம்

கிருஷ்ணகிரி, டிச.11: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாளை(12ம் தேதி) நடக்கிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளர் துறையின் கூட்டு முயற்சியில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதற்கான சிறப்பு பதிவு முகாம், பர்கூர் தனி தாசில்தார் அலுவலகத்தில் நாளை(12ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து திருமணம், கல்வி, மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம். எனவே, கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர் வேலை செய்யும் தொழிலாளர்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு விண்ணப்பம், புகைப்படம் 2, அசல் குடும்ப அட்டை, பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்ற குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கான படிவம் ஆகியவற்றுடன், நேரில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Related Stories: