செம்பட்டி, டிச. 4: வக்கம்பட்டியில் மர்மக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆத்தூர், செம்பட்டி, சின்னாளபட்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவு உள்ளது. இதனால் தனியார் டேங்கரில் விற்பனை செய்யும் தரமற்ற தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலரை தவிர பெரும்பாலானோர் தண்ணீரை காய்ச்சி குடிப்பதில்லை. மேலும் 6 முதல் 10 நாட்கள் வரை சேமித்து பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வேகமாக பரவுகிறது. குறிப்பாக வக்கம்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி பகுதிகளில் மர்மக்காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சைக்காக அதிகளவில் வருகின்றனர்.