நாங்குநேரி, நவ. 30: மூலைக்கரைப்பட்டி அருகே இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் காணப்படுவதால் பெற்றோர் அச்சமடைந்து உள்ளனர். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ரெட்டார்குளத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இங்குள்ள வகுப்பறைக் கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. ஏற்கனவே கான்கிரீட் கட்டிடம் பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, அருகிலுள்ள வேறு பழைய ஓட்டுக்கூரை கட்டிடத்திற்கு வகுப்பறைகள் மாற்றப்பட்டன. இந்த கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததால், இப்பகுதி பொதுமக்கள் நன்கொடை வசூலித்து சேதமடைந்த ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பழுதுகளை நீக்கினர். பின்னர் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இப்பகுதியினர் சொந்த பணத்தில் சுற்றுச்சுவர் கட்டினர்.