டாக்டரிடம் நகை பறித்த வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர், நவ.15: திருப்பூரில் டாக்டரை தாக்கி, நகையை பறித்துச்சென்ற வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது. திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பூமாவீரமகாலட்சுமி (52). பல் டாக்டர். கடந்தாண்டு, அனுப்பர்பாளையத்தில் உள்ள அவரது கிளினிக்கிற்கு, பல் வலிக்கு சிகிச்சை பெற வேண்டும் என ஒரு நபர் வந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், அங்கிருந்த கூர்மையான கம்பியால், டாக்டரை குத்திவிட்டு, அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.

டாக்டரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அந்த நபரை விரட்டி பிடித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த நபர் அந்தியூரை சேர்ந்த சிவராஜ் (26) என தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண்-3 கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் (பொறுப்பு) பழனி, சிவராஜூக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: