சிவகாசி, நவ. 1: திருத்தங்கல் நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, நகராட்சியில் அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகராட்சியில் உள்ள ரதவீதி, விருதுநகர் ரோடு, வெள்ளையாபுரம் ரோடு ஆகிய இடங்களில் கட்டிங்கள், கடைகள், மேற்கூரை அமைத்து ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழியாக வாகனங்கள் செல்வதில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், குறுகிய சாலைகளாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விருதுநகர் ரோட்டில் பெரியார் சிலையில் இருந்து மாரியம்மன் கோயில் வரை உள்ள கடைகளில் மேற்கூரை, ஸ்டால் அமைத்து ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை அருகே ஆட்டோ நிறுத்தம் செயல்படுகிறது. இங்குதான் வெளியூர் பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. இதனால், காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.