கடையம், அக். 26: கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடக்கு மடத்தூர் பகுதியில் நாய்கள் உதவியுடன் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் நெல்லை நாயகம், வனவர் முருகசாமி, வனக்காப்பாளர் மணி, வனக்காவலர்கள் சேகர், ரமேஷ்பாபு, வேட்டை தடுப்புக்காவலர்கள் பசுங்கிளி, மாரியப்பன், வேலுச்சாமி, முத்துக்குமார், சக்திமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சம்பவ பகுதியில் வடக்கு மடத்தூரைச் சேர்ந்த முத்துராஜ், கோபாலகிருஷ்ணன், சண்முகதுரை, பத்திரகாளி, வெங்காடம்பட்டியைச் சேர்ந்த குமார், சுடலை, பார்த்திபன், சேர்வைகாரன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் நாயை வைத்து முயல் வேட்டையாடி கொண்டிருந்தனர்.