கெங்கவல்லி, அக்.26: கெங்கவல்லியில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு போதிய பஸ் வசதியில்லாததால், கிடைக்கும் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கெங்கவல்லியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 900 மாணவர்கள், 800 மாணவிகள், படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளில் 60 சதவீதம் பேர், கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர். அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் மூலமே அவர்கள் வந்து செல்கின்றனர்.