திருவெண்ணெய்நல்லூர், அக். 23: திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் ராஜேந்திரன்(30). அதே கிராமத்தைச் சேர்ந்த பழனி மகள் பொன்மலர்(27). இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பொன்மலர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் அவரின் கணவர் வீட்டில் வளைகாப்பு நடத்தியுள்ளனர். இதற்காக அலங்கார பந்தல், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை பொன்மலர் வீட்டின் வாசலில் உள்ள குப்பைகளை பெருக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்சார கம்பியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.