பருவமழை தொடர்ந்து பெய்தால் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்

சின்னசேலம், செப். 26: கல்வராயன்மலையில் பெய்து வரும் மிதமான மழையால், வறண்டு கிடந்த அணையில் தற்போது நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது அணைக்கு வினாடிக்கு 60 கனஅடி நீர் வரத்து உள்ளது.கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணை 1963ல் தொடங்கி 1966ல் நீர்வடி பரப்பு 113 சதுர மைல் அளவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின்போதும்,  கல்வராயன்மலையில் அதிக மழைபொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு பாசனத்திற்காக அக்டோபர் மாதம் திறந்து விடப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் வரை பருவமழை பெய்யாததால் அணை வறண்டு கிடந்தது.

இந்நிலையில், கல்வராயன்மலையில் கடந்த ஒரு வார காலமாக மழை விட்டு விட்டு பொழிந்தது. இதன் விளைவாக வறண்டு கிடந்த கோமுகி அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர்வரத்து இருந்தது. அதனால் தற்போது அணையின் நீர் மட்டம் 20.2 அடியாக  உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு தொடர்ந்து தற்போது வினாடிக்கு 60 கனஅடி நீர்வரத்து உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பருவமழை பெய்தால் திட்டமிட்டபடி அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்திற்கு அணை திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள்

தெரிவித்துள்ளனர்.

Related Stories: