சிவகங்கை, செப். 19: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘‘மாவட்டத்தில் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 2018- 19நடப்பு நிதியாண்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு விடும் மையம் அமைத்தல் திட்டத்திற்கு ரூ.1 கோடியே 45லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் டிராக்டர்கள், டிரில்லர், நடவு இயந்திரம், தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு வகையிலான இயந்திரம், கருவிகள் மானியவிலையில் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகள், சிறு, குறு மற்றும் மகளிர் விவசாயிகளுக்கு 35முதல் 50சதவீதமும் இதர விவசாயிகளுக்கு 25முதல் 40சதவீதம் கருவிகளின் அடிப்படை விலையில் மானியமாக வழங்கப்படும். மேற்கண்ட கருவிகளை அரசு மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில், தங்களது ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரம் அறிய உதவி செயற்பொறியாளரை அணுகலாம்.