உடுமலை, செப்.19: உடுமலையில் குடிநீர் கேட்டு நேற்று ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை அருகே உள்ள குறள்குட்டை ஊராட்சியில் மூக்குத்தி பள்ளம் கிராமம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. ஆழ்குழாய் தண்ணீரும் வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆவேசம் அடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் கனகராஜ், நிர்வாகிகள் நாகராஜ், தட்சிணாமூர்த்தி, செல்லமுத்து ஆகியோர் தலைமையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.