விழுப்புரம், செப். 19: சீருடை பணியாளர் உடல்திறன் தேர்வில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 182 பெண்கள் தகுதி பெற்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 810 பெண்கள் உள்பட 3,343 பேருக்கு உடல் தகுதித்தேர்வு விழுப்புரம் கா.குப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதல்கட்டமாக நடந்த உடல் தகுதித் தேர்வில் ஆண்களில் 1,691 பேரும், பெண்களில் 419 பேரும் அடுத்த நிலையான உடல்திறன் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரு மாவட்டங்களை சேர்ந்த ஆண்களுக்கு உடல்திறன் தேர்வு நடைபெற்றது. கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டம் ஓட்டம் நடந்தது. இதில் 1,422 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்களுக்கு நேற்று உடல்திறன் தேர்வு நடந்தது. அழைப்பு விடுத்திருந்த 419 பேரில் 6 பேர் தேர்வுக்கு வரவில்லை. 101 பேர் நீளம் தாண்டுதலில் வெற்றிபெற முடியாமல் வெளியேற்றப்பட்டனர். அதேபோல் கிரிக்கெட் பந்து, குண்டு எறிதலில் 20 பேரும், ஓட்ட பந்தயத்தில் 110 பேரும் வெளியேற்றப்பட்டனர். இறுதியாக 182 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த உடல்திறன் தேர்வில் வெற்றிபெற்ற ஆண்கள், பெண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்க உள்ளது.