விழுப்புரம், செப். 19: விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியால் மதிப்புமிக்க அரசியலமைப்பு சட்டம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அரசியலமைப்பு சட்டம் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ள அரசியல், சமூக பொருளாதார நீதி, சிந்தனை, பேச்சு, கருத்து, மதவழிபாட்டு சுதந்திரம் தகுதியிலும், வாய்ப்பிலும் உரிமைகள் ஆட்சியாளர்
களால் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. நமது கூட்டாட்சி முறையும் மாநில உரிமைகளும் கேள்விக்குறியாகியுள்ளன. இந்தியாவில் செல்வ வளங்களை பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. விவசாயம், கைத்தறி உள்பட சிறு, குறு தொழில்களும் நலிவடைந்துவிட்டன. மாநில அதிமுக
அரசும் செயலற்றதாகவும், லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஊறித்திளைப்பதாகவும் உள்ளது.
எனவே இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏஐடியுசியும் இணைந்து நடத்தும் பிரசார இயக்கம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. நாளை (20ம் தேதி) புதுச்சேரியிலிருந்து முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் பிரசார பயணக்குழு புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, கிளியனூர், திண்டிவனம், செஞ்சி, கண்டாச்சிபுரம், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யப்பட்டு மடப்பட்டில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. மறுநாள் விழுப்புரம் பழைய பேருந்துநிலையத்தில் வரவேற்பு கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.