சென்னிமலை: சென்னிமலை அருகே காவிரி குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே 1010 நெசவாளர் காலனி உள்ளது. இந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தனித்தனியே குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு தினமும் ஒரு மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இங்கு கடந்த சில மாதங்களாக 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறவே குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 1010 நெசவாளர் காலனி பொதுமக்கள் நேற்று காலை காலனி பிரிவு அருகே பெருந்துறை - பழனி மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.