சிவகங்கை, ஆக. 14: சிவகங்கை மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பள்ளி சென்றுவர ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் 190 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் கிராமத்து மாணவர்களே. இந்த மாணவர்கள் பள்ளி சென்று வர அரசு டவுன் பஸ்களையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். திருப்புவனம், சிவகங்கை போன்ற ஒருசில பகுதிகளில் மட்டும் ஷேர் ஆட்டோக்களிலும் மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் மாணவர்கள் பள்ளி சென்று வரும் நேரங்களில் மிகக்குறைவான பஸ்களே இயக்கப்படுகிறது. ஒரு சில நகர்ப்பகுதிகள் தவிர கிராமப்பகுதிகள் முழுவதும் பள்ளி சென்றுவர பல மணி நேரம் காத்திருந்து ஒரே ஒரு டவுன் பஸ்ஸில் ஏராளமான மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பஸ்ஸின் படிக்கட்டுகள், மேற்கூரைகளில் மாணவர்கள் பயணம் செய்வது தினந்தோறும் நடந்து வருகிறது. ஷேர் ஆட்டோக்களிலும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.