கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையம் சார்பில், டான்சி பகுதியில் அரசின் மானியத்தில் இயங்கும் அச்சக குழுமம் மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: மாவட்ட தொழில் மைய வளாகத்தில் மத்திய அரசின் ரூ9 கோடியே 31 லட்சம், மாநில அரசின் ரூ90 லட்சம் மானியத்துடன் கூடிய பங்களிப்பு, குழு பங்களிப்பு ரூ1 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ11 கோடியே 71 லட்சத்தில் அச்சக தொழில் குழுமம் இயங்கி வருகிறது. இதில் நவீன அச்சு எந்திரங்கள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள், போர்டுகள் அச்சிடப்படுகிறது. அனைத்து விதமான அச்சு பணிகளும் இங்கு நடைபெறுகிறது. இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரியில் அச்சக தொழில் குழுமம் அமைக்கப்பட்டதின் மூலம் அச்சக உரிமையாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.