திருவெண்ணெய்நல்லூர், ஆக. 13: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்மங்கலம்-கூரானூர் செல்லும் சாலையின் குறுக்கே மலட்டாறு செல்கிறது. மழை காலங்களில் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தென்மங்கலம், கூரானூர், மேலமங்கலம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அவர்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு கூட வெளியூர்களுக்கு சென்று, வரமுடியாமல் முடங்கி விடும் நிலை உள்ளது. தேர்தல் என்றால் இப்பகுதி மக்கள் அனைவரும் வேட்பாளர்களிடம் கேட்கும் முக்கிய கோரிக்கை, இந்த மலட்டாறில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதுதான். மேம்பாலம் அமைக்க கோரி இப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் காற்றில் பறக்க விடப்பட்ட நிலையில், தற்போது இப்பகுதி மக்களின் கோரிக்கையை அரசு ஏற்று ரூ.7 கோடியே 10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட அனுமதி அளித்தது.