நன்றி குங்குமம் டாக்டர்
மிகவும் குறைவானவர்களுக்கே கணையப் புற்றுநோய் ஏற்படுகிறது. இருந்தாலும், கணையப்புற்றுநோய் வந்துவிட்டால், மிக விரைவாக உடல் முழுவதும் பரவி, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது.
கணையப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
சிகரெட் புகைப்பது, வயது முதிர்வு, நாள்பட்ட கணைய அழற்சி, நீரிழிவு நோய், அதிகமாக மது அருந்துவது மற்றும் உடல் பருமன் ஆகியவை கணையப் புற்றுநோய் உருவாவதற்கான காரணிகள் ஆகும். அதுபோன்று, இதுவும் ஒரு பரம்பரரை நோயாகும். குடும்பத்தில் யாருக்கேனும் இந்நோய் இருந்திருந்தால், மற்ற நபருக்கு வர வாய்ப்பு அதிகமுள்ளது. கணைய புற்றுநோயின் அறிகுறிகள்…
கணையப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில், இது மற்ற உறுப்புகளுக்கு பரவும் வரை அதன் அறிகுறிகள் எதுவும் தெரியாது. மேல் வயிற்றில் வலி, முதுகில் தொடர் அசௌகரியம், பசியின்மை, எடை இழப்பு, மஞ்சள் காமாலை, சரும அரிப்பு, சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு கணையப்புற்றுநோய் வந்ததும், திடீரென சர்க்கரை நோயும் உருவாகிவிடும். கணையப் புற்றுநோயின் வகைகள் எத்தனை..கணையம் நாளமில்லாச் சுரப்பி மற்றும் எக்ஸோகிரைன் சுரப்பி ஆகும். நாளமில்லா சுரப்பிகள் ரசாயனங்களை நேரடியாக ரத்த ஓட்டத்தில் சுரக்கின்றன, அதே சமயம் எக்ஸோகிரைன் சுரப்பிகள் ஒரு குழாய் வழியாக ரசாயனங்களை சுரக்கின்றன. கணையத்தில் உருவாகும் புற்றுநோயின் தோற்றத்தைப் பொறுத்து, கணைய புற்றுநோய் இரண்டு வகைகளாக உள்ளது, அவை:எக்ஸோகிரைன் கணையப் புற்றுநோய் . இதில், பெரும்பாலான கணையக் கட்டிகள் புற்றுநோயாகும். ராட்சத செல் கார்சினோமா, அடினோஸ்குவாமஸ் கார்சினோமா மற்றும் அசினார் செல் கார்சினோமா ஆகியவை பல்வேறு வகையான எக்ஸோகிரைன் கணையப் புற்றுநோயாகும்.நாளமில்லா கணைய புற்றுநோய்: இந்த வகை கணையப் புற்றுநோய் பொதுவானது அல்ல. எண்டோகிரைன் கணையப் புற்றுநோயின் வகைகள் சோமாடோஸ்டாடினோமாக்கள், இன்சுலினோமாக்கள் மற்றும் குளுகோகோனோமாக்கள் ஆகும்.
கணையப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?
நோயின் தாக்கத்தைப் பொறுத்து, கீமோ தெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
கீமோதெரபி: கீமோதெரபியில் புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்துகளின் பயன்பாடு அடங்கும். புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.
கதிர்வீச்சு சிகிச்சை: புற்றுநோய் செல்களை அழிக்க அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சை: கட்டியை முழுமையாக அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் பெரும்பாலும், அறுவைசிகிச்சைதான் நிரந்தரத் தீர்வாக காணப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய முடியாத சூழலில் இருக்கும் நோயாளிகளுக்குத்தான் கீமோதெரபியும், கதிர்வீச்சு சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இவை நிரந்தரத் தீர்வாக இருக்காது. மேலும், தற்போது லேட்டஸ்ட் சிகிச்சையாக இமினோ தெரபி செய்யப்படுகிறது. ஆனால், இதை எல்லோருக்கும் பயன்படுத்த முடியாது. தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே செய்யப்படும் என்றார்.
தொகுப்பு : தவநிதி