திருவனந்தபுரம்: வைக்கம் சத்யாகிரக போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து போராடி வெல்ல வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது: தமிழ்நாட்டில் சட்டசபை நடைபெறும் நேரமாக இருந்த போதிலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தது வைக்கம் சத்யாகிரக போராட்டத்திற்கு அவரும், தமிழ்நாடு அரசும் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணமாகும். அதற்காக நான் தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வைக்கம் சத்யாகிரகம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த ஒரு போராட்டமாகும். அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால் அதற்கு வலிமை அதிகம் என்பதை வைக்கம் சத்யாகிரக போராட்டம் உணர்த்துகிறது. இந்திய வரலாற்றில் இது ஒரு ஈடு இணை இல்லாத போராட்டமாகும். இது சமூக மாற்றங்களுடன், தேசியமும் இணைந்த ஒரு போராட்டமாகும்.