பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் பாஜ மற்றும் மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கர்நாடகா சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2018ல் நடந்த தேர்தலில் துமகூரு மாவட்டம், குப்பி தொகுதியில் மஜத சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவாஸ், கடந்த திங்கட்கிழமை தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இரண்டு நாட்கள் கழித்து டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் ஹாசன் மாவட்டம், அரக்கலகூடு பேரவை தொகுதியில் இருந்து 5 முறை மஜத சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பேரவை உறுப்பினராக இருந்த ஏ.டி.இராமசாமி, நேற்று தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இரண்டொரு நாளில் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று பல்லாரி மாவட்டம், கூட்லகி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஒன்.ஒய்.கோபாலகிருஷ்ணா, அவர் நேற்று காலை பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதம் கொடுத்தார். அவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார்.