வாகன ஓட்டிகளை குறிவைத்து சாக்கரீன் கலந்த பதநீர் விற்பனை: வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம்

சிவகாசி: கோடை காலங்களில் குளிர் பானம், பழ ஜூஸ், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு, பதநீர் ஆகியவற்றின் விற்பனை அதிகரிக்க தொடங்கிவிடும். வெயில் சூட்டில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் மேற்கண்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இம்மாதம் தொடங்கியது முதல் கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் கரும்பு ஜூஸ் கடைகள், பழச்சாறு கடைகள் என திடீர் கடைகள் அதிகரித்துள்ளன. கடும் வெயிலால் இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் என்பதால் நுங்கு, பதநீர் இவைகளும் பரவலான அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஊருக்கு வெளியே சாலையின் இரு புறங்களிலும் வாகன ஓட்டிகளை குறிவைத்து நுங்கு விற்பனை நடந்து வருகிறது. வாகனங்களில் வைத்து நகர்ப்பகுதிக்குள் பதநீர் விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான பானம், உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு எவ்வித உபாதைகளையும் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் பதநீரை வாங்கி குடிக்கின்றனர்.

ஆனால் இதில் பல்வேறு கலப்படம் செய்து இனிப்பிற்காக சாக்கரீனையும் கலப்பதால் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுத்துகின்றன. இதனால் பதநீரை வாங்கி குடிக்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகாசியை சேர்ந்த கண்ணன் கூறுகையில், முன்பு அதிகமான அளவில் பதநீர் எடுக்கப்படும். தற்போது குறைந்த அளவிலேயே பதநீர் எடுக்கின்றனர். இதனால் பதநீர் பற்றாக்குறையை ஈடுகட்ட கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர்.

சாக்கரீன் கலந்த பதநீர் தற்போதுள்ள வெயில் சூட்டால் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. இயற்கையானது என்ற நம்பிக்கையில் வாங்கியே பதநீரை குடிக்கிறோம். எனவே அதில் கலப்படம் செய்வதை தவிர்க்க வேண்டும். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: