சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தமிட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டம், வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் கோடம்பாக்கம் மெட்ரோ வரையிலான 8 சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்கள் மற்றும் நிலையங்களுக்கு இடையேயான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள்,
கட் மற்றும் கவர் பாக்ஸ் (Cut & Cover Box), யூ-செக்ஷன் (U Section) மற்றும் சாய்வுதளம் ஆகியவற்றில் மின்சாரம், பிளம்பிங் (குழாய் பதிப்பு) மற்றும் தீயணைப்பு பாதுகாப்புப் பணிகளுக்கான கொள்முதல், நிறுவுதல், சோதனை செய்தல், செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல் மற்றும் பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் Jakson Limited நிறுவனத்திற்கு ரூ. 137.08 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், வழித்தடம் 4-ல் உள்ள 8 சுரங்கப்பாதை நிலையங்களில் மின்சாரம் மற்றும் இயந்திரப் பணிகளை வழங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் Jakson Limited நிறுவனத்தின் மேலாளர் யோகேந்திர பிரசாத் (வணிகப் பிரிவு) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் எஸ். ராமசுப்பு (பராமரிப்பு மற்றும் மெட்ரோ ரயில்), ஆலோசகர் எஸ்.கே. நடராஜன் (மின்சாரம் மற்றும் இயந்திரம்), இணைப் பொது மேலாளர் எல். அபித் அலி (மின்சாரம் மற்றும் இயந்திரம்), மேலாளர் வி.சு. வெங்கடேசன் (மின்சாரம் மற்றும் இயந்திரம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள், Jakson Limited நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வின் போது உடனிருந்தனர்.
