ஆவடி: ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. அம்பத்தூரை சேர்ந்த ராபின்சன் (39) என்பவர் இந்த பள்ளியில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளியில் ஆண்டு தணிக்கை நடந்தது. இதில், ராபின்சன், மனைவி நான்சியுடன்(33) சேர்ந்து 319 பேர்களிடம் போலியான ரசீது மூலம் ரூ.49.24 லட்சம் ஏமாற்றியது தெரியவந்தது.
தலைமை ஆசிரியர் பொன்மதி, கடந்த மார்ச் 1ம் தேதி ஆவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், பொள்ளாச்சியில் தலைமறைவாக இருந்த ராபின்சனை ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரது மனைவி நான்சியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.