தமிழ்நாட்டில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம்  500 அரசு நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அந்தியூர் பகுதியில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தித் தரப்படுமா எனவும், கம்பம் தொகுதியில் உள்ள நூலகங்கள் சிதலமடைந்துள்ளதால் அதனை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஜி வெங்கடாசலம் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி படிப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2022-2023ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், கிராமப்புற நூலகங்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், WiFi வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக  அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக 500 நூலகங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்டமாக அனைத்து அரசு  நூலகங்களுக்கு வைஃபை வசதிகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து சிதிலமடைந்த புதிய நூலகம் அமைப்பதற்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: