சினிமாவில் நடிக்க இடையூறு கணவரை தாக்கிய நடிகை நண்பருடன் கைது

பொள்ளாச்சி: கணவரை தாக்கி விட்டு நாடகமாடிய சீரியல் துணை நடிகை நண்பருடன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரம்யா (36) . இரு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் கூறப்படுகிறது 2 ஆண்டுக்கு முன்பு, பெற்றோர் வீட்டுக்கு ரம்யா குழந்தைகளுடன் சென்றார். சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில், சின்னத்திரையில் வாய்ப்பு கேட்டு ரம்யா சென்னை சென்றுள்ளார். சின்னத்திரை நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். அப்போது துணை நடிகராக இருந்த கோவையை சேர்ந்த டேனியல் சந்திரசேகருடன் ரம்யாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில் குழந்தைகளுக்காக ரமேசுடன் வாழும்படி பெற்றோர் கூறவே திரும்பி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு வெளியே சென்று வரலாம் என்று கூறி ரமேசுடன் உடுமலை வரை பைக்கில் சென்று, பின் பொள்ளாச்சி திரும்பினார். வழியில், பைக்கை வழிமறித்த ஒரு நபர், ரமேஷை தாக்கியதுடன் பிளேடால் கீறியதாக கூறப்படுகிறது.  இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரித்தபோது, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசைக்கு இடையூறு செய்ததால் நண்பர் டேனியல் சந்திரசேகரிடம் கூறி கணவரை தாக்கிவிட்டு நாடகமாடியது தெரிவந்தது. இதையடுத்து நடிகை ரம்யா, நடிகர் டேனியல் சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: