நாகப்பட்டினம்: மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டனை விதித்த நிலையில், அவரை எம்பி பதவியிலிருந்து நீக்குவதாக மக்களவை செயலாளர் அறிவித்துள்ளார். இது இந்திய ஜனநாயகத்தை பாழ்படுத்தும் மற்றொரு அராஜக நடவடிக்கையாகும். அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதும், உடனடியாக ராகுல்காந்தி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த நிகழ்வை ஜனநாயக சக்திகள் சாதாரணமாக கடந்து போகாமல், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியாக கருதி உரிய வகையில் மக்களை அணி திரட்ட தயாராக வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.