ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு எதிரான போராட்டம் அறிவிப்பு காங்கிரசார் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: ராகுல்காந்தியின் பதவி பறிப்புக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரசார் எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சூரத் குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பின்படி தலைவர் ராகுல்காந்திக்கு அதிகப்படியான இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிற சந்தேகம் நிலவியது. அது இப்போது அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளை முறியடித்து சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ராகுல்காந்தி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க கேட்டுக் கொள்கிறேன். ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விரைவில் அறிவிக்க இருக்கிறார். இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் முழு அளவில் பங்கேற்க அணி திரண்டு வர அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: