சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: உலக தண்ணீர் நாளையொட்டி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் என்.எல்.சி., சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்களை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை மாநில அளவில் செய்யும் பணிகளை, கிராம அளவில் செய்வதற்கும், சட்டப்பேரவைக்கு மாநில அளவில் உள்ள அதிகாரத்தை, கிராம அளவில் பயன்படுத்துவதற்கும் கிராம சபைக்கு அதிகாரம் உள்ளது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அதிகாரம் பெற்ற கிராமசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசு எளிதாக கடந்து சென்று விடக் கூடாது. அவற்றை ஆய்வு செய்து அதிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.