தங்கம் கிடைக்காததால் மூதாட்டி அடித்து கொலை: 2 பேர் கைது

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி வள்ளியம்மாள்(82). இவரது கணவர் மாணிக்கம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் கஜேந்திரன், உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்று குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். கிராமத்தில் உள்ள வீட்டில் வள்ளியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் மூதாட்டி வீடு பூட்டி இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் வள்ளியம்மாள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த ஆர்கேபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மூதாட்டி கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவா கல்யாண் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில், போலீசார் விரைந்து செயல்பட்டனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் வினோத்குமார், சதீஷ் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் காவல் நிலையம் கொண்டு வந்து உரிய முறையில் விசாரித்தனர்.  

மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது கழுத்தில் நெக்லஸ் கைகளில் வளையல், கம்மல். மூக்குத்து உள்ளிட்ட   தங்க ஆபரணங்கள் அணிந்திருப்பதை நோட்டமிட்டு  இரவு நேரத்தில் வீட்டில் புகுந்தோம். ஆனால் நகைகள் அனைத்தும் கவரிங் என்று தெரிந்ததால் ஆவேசமடைந்து மூதாட்டி தலையில் இரும்பு ராடால் கடுமையாக தாக்கி கொலை செய்தோம். போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிச் சென்றோம் என்று கூறினர். போலீசார் அவர்களை கைது செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: