புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் தூங்கிய வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை: 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் தூங்கிய வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூரை சேர்ந்தவர் மோகன் (எ) பல்லுமோகன் (37). இவர், திருமண பந்தல், சமையல் ஆர்டர் எடுக்கும் தொழில் செய்து  வந்தார். அதன்படி, புது வண்ணாரப்பேட்டை,  அருணாச்சல ஈஸ்வரர்  கோயில் தெருவில் உள்ள முருகன் கோயில் விழாவுக்காக  பந்தல் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய மோகன், புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் பின்புறம் உள்ள மேற்கு மாட வீதியில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் படுத்து தூங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலையில் ஆட்டோவை எடுக்க அதன் உரிமையாளர் விஜய் வந்தபோது, மோகன் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, தண்டையார்பேட்டை துர்காதேவி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (23) மற்றும் அஜிஸ் நகரைச் சேர்ந்த சிவா (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோகனை கொலை செய்தது தெரியவந்தது.

Related Stories: