மாங்காடு இரட்டை கொலை வழக்கு மனநல மருத்துவமனையில் சேர்க்க முயன்றதால் தந்தை, அக்காவை கழுத்தறுத்து கொன்றேன்: கடைக்கு சென்றதால் அம்மா தப்பினார் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

பல்லாவரம்: மாங்காடு பகுதியில் தந்தை, அக்காவை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர், மனநல மருத்துவமனையில் சேர்க்க முயன்றதால் இருவரையும் கழுத்தறுத்து கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  மாங்காடு, அடிசன் நகர், ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வராஜ் (65). இசை பயிற்சி ஆசிரியரான இவர் தனது மனைவி சாந்தி (55) மற்றும் மகன் பிரகாஷ் (32) உடன் வசித்து வந்தார். இவரது மகள் பிரியா (38), அதே பகுதியில் உள்ள பாண்டியன் நகர், 3வது குறுக்கு தெரு, பாலாஜி அவென்யூவில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது தந்தை செல்வராஜையும், அக்கா பிரியாவையும், பிரகாஷ் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

 இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பிரகாஷை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட செல்வராஜ் குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக, சமூகத்தில் மதிப்பு மிக்க குடும்பமாக இருந்துள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் நன்கு படித்து நல்ல நிலையில் இருந்து வந்துள்ளனர். செல்வராஜின் ஒரு மகனுக்கும், மகளுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வந்த நிலையில், பிரகாஷூக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்த பிரகாசுக்கு, கெட்ட நண்பர்களின் சகவாசத்தால், மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

இருந்த போதிலும் நோய் முற்றிலும் குணமாகாமல் பிரகாஷ் அடிக்கடி தனிமையில் பேசி, மூர்க்கத்தனமாக இருந்து வந்துள்ளார். இதனால், மீண்டும் அவரை சிகிச்சைக்காக அயனாவரத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பது குறித்து, அவரது அம்மாவும், அக்காவும் கடந்த வாரம் கலந்து ஆலோசித்தனர். இதனை ஒட்டுக் கேட்ட பிரகாசுக்கு, பயங்கர கோபம் ஏற்பட்டது. தான் நலமாக இருப்பதாக கருதிய அவர், தன்னை அம்மாவும், அக்காவும் வேண்டும் என்றே மருத்துவமனையில் சேர்ப்பதாக அவர் கருதினார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தார். அதன் முதல் கட்டமாக அம்மாவை கொலை செய்ய வரும் போது தான், அவர் பிரகாசுக்கு மாத்திரைகள் வாங்க வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதே நேரத்தில் வீட்டில் இருந்த அவரது தந்தை செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார்.

அத்துடன் நேராக தனது அக்கா வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அங்கு வைத்து தனது அக்காவின் மாமியார் கண்ணெதிரிலேயே அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நேற்று பெரும்புதூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை சென்னை, அயனாவரத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து கொலையாளி பிரகாஷ் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: