சிந்தாமணியில் குடிநீர் கேட்டு இரவில் பொதுமக்கள் மறியல்

விக்கிரவாண்டி, மே 15: விக்கிரவாண்டி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் ஒன்பது குடிநீர் மினி தொட்டியும், அய்யூர் அகரத்தில் இரண்டு மினி குடிநீர் தொட்டியும் உள்ளது. இது பழுதடைந்து பல நாட்களான பிறகும் சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர். இது குறித்து கடந்த வாரம் தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் 15ம் தேதிக்குள் சரிசெய்து கொடுப்பதாக கூறினர். ஆனால் இதுவரையில் குடிநீர் தொட்டியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயரவிதுரை தலைமையில் பெண்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்றிரவு  அப்பகுதியில் திரண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்து, விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, முபாரக் அலிபேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் தட்டுபாட்டை போக்க புதியதாக போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த மினி குடிநீர் தொட்டி மோட்டார்களை சீரமைத்து 5 நாட்களுக்குள் குடிநீர் தட்டுபாடை சரிசெய்து கொடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணிநேரம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: