ராகுலை மன்னிப்பு கேட்க வைப்பது நம் கடமை: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரானவர்கள் பேசுவதை போல் ராகுல் காந்தி பேசுகிறார். ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வைப்பது எம்பிக்களின் கடமை என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “இந்தியாவுக்கு எதிரானவர்கள் பேசுவதை போல் ராகுல் காந்தி பேசி இருக்கிறார். லண்டன் பேச்சுக்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நமது கடமை.

அந்த கடமையை செய்ய நாம் தவறி விட்டால் மக்கள் நம்மை கேள்வி கேட்பார்கள். ராகுல் காந்தி அவரது பேச்சு, செயல்கள் மூலம் காங்கிரஸ் கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதை பற்றி எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால், இந்தியாவை பற்றி அவதூறாக பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அதை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம். நாட்டை அவமதிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்து விட்டார்கள் என்பதற்காக, நாட்டை பற்றி காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பொருள் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் நாடாளுமன்ற மாண்பை சீர்குலைத்து விட்டார். அரசியலமைப்பையும், நீதித்துறையையும் அவமதித்து விட்டார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: