மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் அதிமுக மாஜி அமைச்சர்கள் உள்பட 2,000 பேர் மீது வழக்கு

மதுரை: மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர்கள் உட்பட 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை, அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் வீடியோ எடுத்து ‘துரோகத்தின் அடையாளம்’ என விமர்சித்தார். இதனால் அவரை, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட சிலர் தாக்கினர். இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் ராஜேஸ்வரன் புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் எடப்பாடி பழனிசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை கண்டித்து போலீஸ் அனுமதி வாங்காமல், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அதிமுகவினர் கடந்த 13ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் கலைந்து செல்லும்படி கூறியும் கேட்கவில்லை. இதுகுறித்து எஸ்ஐ அன்புதாசன் புகாரின்படி சுப்பிரமணியபுரம் போலீசார், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, பகுதி செயலாளர்கள் முத்துவேல், கருப்பசாமி மற்றும் 500 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: