தென்னை விவசாயிகளின் நலன் கருதி கரூர் மாவட்டத்தில் தேங்காய் கொப்பரை நேரடி கொள்முதல்-விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்

கரூர் : தென்னை விவசாயிகளின் நலன் கருதி கரூர் மாவட்டத்தில் தேங்காய் கொப்பரை நேரடி கொள்முதல் செய்யப்படும். இதேபோல, அதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாய மக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 2021ம் ஆண்டில் விவசாயிகள் உள்பத்தி செய்த கொப்பரை தேங்காய்களை ஒன்றிய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரவைக் கொப்பரைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 117.50 வீதம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயனடைந்ததோடு, கொப்பரையின் சந்தை விலை உயர்ந்ததால் அனைத்து தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் லாபகரமான விலை கிடைத்தது.

இதே போல், நடப்பு 2023ம் ஆண்டு மீண்டும் தென்னை விவசாயிகளின் நலன் கருதி, ஒன்றிய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின், திருச்சி விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இரும்பூதிபட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக அரவைக் கொப்பரை நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வகையில் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 6 சதவீதம் இருக்குமாறும், நன்கு உலர வைத்து தரமுள்ள அரவைக் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.108.50 வீதம் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான கிரயம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் துவங்கி செப்டம்பர் 2023 வரை அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்.இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆவணங்களுடன் இரும்பூதிபட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகி பதிவு செய்து தங்களது கொப்பரையை விற்பனை செய்து பயனடையலாம்.

நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தை தென்னை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: