பாலக்கோடு அருகே அரசு பள்ளியில் பெஞ்ச்களை அடித்து நொறுக்கிய மாணவர்கள்: வீடியோ வைரல்

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, செய்முறை தேர்வு முடித்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள், அரசு பள்ளி வகுப்பறையில் இருந்த பெஞ்ச், டெஸ்க்குகளை  அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை, 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் கடந்த ஒரு வாரமாக 12ம் வகுப்பு  செய்முறை தேர்வு நடந்தது. இது நேற்று முன்தினத்துடன் முடிந்தது.

தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்லும் முன்பாக, வகுப்பறையில் இருந்த பெஞ்ச், டெஸ்க், மின்விசிறி மற்றும் சுவிட்ச் பாக்ஸ் உள்ளிட்டவற்றை பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அடித்து உடைத்து நொறுக்கினர். இதனை மாணவர்களில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: