துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ விமானம் முழுவதும் நிவாரணப்பொருட்களை அனுப்பிய ரொனால்டோ.!

துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, ரொனால்டோ விமானம் முழுவதும் நிவாரணப்பொருட்களை அனுப்பியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரையோடு தரைமட்டமானது, கிட்டத்தட்ட 46,000 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தபந்தங்களை இழந்து தவித்தனர். பல சர்வதேச நாடுகளும் அந்த நாடுகளுக்கு தங்கள் உதவிகளை வழங்கியது. நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக விமானம் முழுதும் நிவாரணப்பொருட்கள் அனுப்பியுள்ளார்.

கூடாரங்கள், உணவுப் பொட்டலங்கள், தலையணைகள், போர்வைகள், படுக்கைகள், குழந்தைகளுக்கான உணவு, பால் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொனால்டோவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ரொனால்டோ உதவி செய்வது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னதாகவும் அவர் பலமுறை உதவி செய்துள்ளார்.

குழந்தையின் மூளை அறுவை சிகிச்சைக்கு $83,000 செலுத்தினார் மற்றும் போர்ச்சுகலில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு நிதியளிப்பதற்காக $165,000 நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, துருக்கிய கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல், தன்னிடம் உள்ள ரொனால்டோவின் கையெழுத்திட்ட ஜெர்சிகளில் ஒன்றை ஏலம் விட ரொனால்டோ அனுமதியளித்துள்ளதாகவும், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்த பணம் வழங்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: