தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி அதிமுகவுடன் ஓபிஎஸ் மோதி பார்க்கட்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதி திட்டமிட்டு, நம் இயக்கத்தை காக்க போராடி வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தனது அறிக்கையில் விரக்தியின் உச்சியில் உளறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிடம் இருந்து தட்டிப்பறித்த வெற்றியை, இந்த துரோகி கொண்டாடுவது வெட்கக்கேடு. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்ற தனது எண்ணத்தில் மண்விழுந்த ஆத்திரத்திலும், தன் அரசியல் வாழ்வு இப்படி சூனியமாகிபோய்விட்டதே என்ற ஆற்றாமையிலும் பித்துக்குளிபோல் உளறத் துவங்கி உள்ளார் பன்னீர்செல்வம். இதுவரை இவரைப்பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட எடப்பாடியார் சொன்னதில்லை.

இந்த இயக்கத்தை கட்டிக்காக்கும் தியாக வேள்வியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும், இவரை சார்ந்தவர்களுக்கும் தகுதி, திறமை இருந்தால் தனிக்கடை (கட்சி) துவங்கி எடப்பாடியாருடன் அரசியல் ரீதியாக மோதி பார்க்கட்டும். அதைவிடுத்து, தனி மனித தாக்குதலில் ஈடுபட்டால் கைகட்டி வேடிக்கை பார்க்க உண்மையான அதிமுக தொண்டர்கள் கோழைகள் அல்ல என்று எச்சரிக்கிறேன்.

Related Stories: