வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் தொடர்ந்து உயரும் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரித் துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வணிகவரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  வணிகவரித்துறையில் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458.96 கோடி ஆகும்.  கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய்  ரூ.92,931.57 கோடி ஆக இருந்தது.  இவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் ரூ.24,527.39 கோடி வருவாயை வணிகவரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.  அதே போன்று பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை  எட்டியுள்ளது.

நடப்பாண்டில் மார்ச் வரை பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.15,684.83 கோடி ஆகும்.  கடந்த வருடம் இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.12,161.51 கோடியை விட  ரூ.3,523.32 கோடி அதிகமாக  நடப்பு ஆண்டில்  பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.  வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களினாலும் இத்துறைகளின் வருவாய் அதிகரித்து வந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: