காதலித்து திருமணம் செய்த வாலிபர் ஏமாற்றியதால் டிக்டாக் திருநங்கை தற்கொலை முயற்சி

சேலம்: காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஏமாற்றியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததால், மனமுடைந்து போன டிக்டாக்கில் பிரபலமான திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா (25). திருநங்கையான இவர் டிக்டாக் செய்து வருகிறார். இவர் நேற்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின் பேரில், கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இவர் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ராமு (28) என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் குடும்பம் நடத்தி வந்தனர். கொலை வழக்கில் சிறை சென்ற ராமுவை, ரூ.3 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி ஜாமீனில் வெளியே கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க, பெற்றோர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஸ்ரேயாவை அடித்து கொடுமைபடுத்தியுள்ளார். அவரது தந்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று மாலை குடிபோதையில் இருந்த ராமு, சாணி பவுடரை கரைத்து குடித்ததாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். தன்னுடன் இருந்த ஸ்ரேயா பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததால், தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் ராமு தெரிவித்துள்ளார். திருநங்கை ஸ்ரேயா, தனது காதல் கணவருடன் டிக்டாக் செய்து, ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: