தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சனைக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும்: எல்.முருகன் பேட்டி!

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவதை தடுக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையிலும், இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், காரைக்கால், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த நிலையில் 7 பேரை கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். மேலும், 4 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியதுடன் மீனவர்களை கடலில் தள்ளி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவதை தடுக்க இலங்கை அதிபர், மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன். ஏப்ரல் மாதம் இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு விரைவில் கிடைக்கும். இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: