பாஜவின் கதவுகள் மூடப்பட்டு விட்டன 3 ஆண்டுக்கு ஒருமுறை நிதிஷுக்கு பிரதமர் கனவு: அமித் ஷா அதிரடி

லவுரியா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒருமுறை பிரதமராகும் கனவு வரும் என கூறிய அமித்ஷா, பாஜவில் அவருக்கான கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதாக கூறினார்.

பீகாரின் பால்மிகி நகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மேற்கு சம்பரன் மாவட்டத்தில் நடந்த பாஜ பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வியை அடுத்த முதல்வராக்குவதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதனை எப்போது செய்வார் என்று அவர் அறிவிக்க வேண்டும்.

ஜெய் பிரகாஷ் நாராயண் காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் காட்டாட்சிக்கு எதிராகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய நிதிஷ்குமார் தனது வளர்ச்சிக்கு ஆதரவாக பிரதமராகும் லட்சியத்துக்காக காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் மெகா கூட்டணி அமைத்துள்ளார். ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒருமுறை நிதிஷுக்கு பிரதமராகும் கனவு வந்து போகும். இனி ஒருபோதும் பாஜவுடன் நிதிஷ் கூட்டணி சேர முடியாது. அவருக்கான பாஜவின் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டன. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Related Stories: