தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது வழிப்பறி, மிரட்டல் வழக்கு

வேதாரண்யம்: தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண்குமார், மாதவன், கார்த்தி, முருகன் ஆகியோர் கடந்த 21ம்தேதி இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்றுமுன்தினம் அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலையை பறித்துக்கொண்டதுடன், அவர்களை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த 5 மீனவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று கலெக்டர் மகாபாரதி  சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை மீது வழிப்பறி, மிரட்டுதல், கொடூர தாக்குதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: