டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நேற்று அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நூற்றாண்டில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து, 34,000 மக்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, துருக்கியை தொடர்ந்து, அடுத்ததாக இந்தியா, பாகிஸ்தானை மையமாக கொண்டு பலமான நிலநடுக்கம் தாக்க வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில், அசாமின் நாகோன் மாவட்டத்தில் நேற்று மாலை 4.15 மணி அளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால், உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.