கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் 300 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த சித்தூர் எம்எல்ஏ-தெலுங்குதேசம் கட்சி பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

சித்தூர் : சித்தூர் கொங்காரெட்டிப்பள்ளியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் சித்தூர் எம்எல்ஏ ஜங்காளபள்ளி சீனிவாசலு 300 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தேசிய பொது செயலாளர் நாரா லோகேஷ் குற்றம் சாட்டியுள்ளார். சித்தூர் கொங்காரெட்டிபள்ளி பகுதியில் உள்ள மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் அருகே நேற்று அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் பங்கேற்று பேசியதாவது:

ஆந்திர மாநிலத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை. சர்வதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு உதாரணம் சித்தூர் எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு, அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி. ஜங்காளப்பள்ளி சீனிவாசலு 3 ஆண்டுகால ஆட்சியில் 300 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரது அண்ணன் மகன் சிவா என்பவர் சித்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கல் குவாரி உரிமையாளர்களை மிரட்டி பல கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி அவரது சொந்த தொகுதியில் பல்வேறு ஊழல்கள் செய்து வருகிறார். அது மட்டுமின்றி விவசாயிகளிடம் பால் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார். சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அனைத்து செம்மரக்கட்டைகளை இரவோடு, இரவாக வெட்டி கடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து வருகிறார். கல்குவாரிகளை ஆக்கிரமிப்பது, மணலை வெளி மாநிலங்களுக்கு கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்.

எம்எல்ஏ அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் கட்ட குத்தகை எடுத்தவர்களிடம் கமிஷன் கேட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். தேசிய நெடுஞ்சாலை குத்தகை எடுத்தவர்களிடமிருந்து கமிஷன் கேட்டு ₹25 கோடி மிரட்டி வாங்கியுள்ளார். இதுபோன்ற பல்வேறு ஊழல்களில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். சித்தூர் மாவட்டத்தில் எந்த பணி செய்ய வேண்டும் என்றாலும், அதில் கமிஷன் கொடுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஊழல்கள் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெகன்மோகன் இதையறிந்தும் அமைதியாக உள்ளார்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வந்தார். இதனால், படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் சித்தூர் மாவட்டத்தில் ஒரு தொழில் நிறுவனங்கள் கூட தொழில் தொடங்க முன்வரவில்லை. வருகிற 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார். பின்னர் முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு தற்போது 20ம் தேதியானாலும்  வழங்கப்படுவதில்லை.

இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அமர்நாத், எம்எல்சி துரைபாபு, தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் நானி, துணை தலைவர் காஜூர் பாலாஜி, இளைஞர் அணி தலைவர் ராஜேஷ், முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் பீட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொது கூட்டம் நடைபெற்ற இடத்தில் சித்தூர் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆளும் கட்சி அராஜகம்

பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த பொதுமக்களை போலீசார் மனுமதிக்கவில்லை. மேலும், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போலீசார் துண்டிவிட்டுள்ளனர். இதனால், கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆளும் கட்சியினர் இதுபோன்ற அராஜகத்தில் அடிக்கடி ஈடுபட்டு வருவதாக தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமனுமதி மறுத்த போலீசார்

சித்தூரில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொது செயலாளர் நாராலேகேஷ் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அங்கிருந்த போலீசார் பொது கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்னர். இருந்தாலும் தெலுங்கு தேசம் கட்சியினர் பொதுக்கூட்டத்தை நடத்தினர். அப்போது, கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: