கல்வி மிகவும் அவசியம்!: புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமை பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1.16 லட்சம் பேர் ஏற்கனவே பயனடைந்து வரும் நிலையில் மேலும் 1.04 லட்சம்  மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமை பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலைச்சர்,

உயர்கல்வி சேர்க்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது:

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. கலைஞர் போட்ட ஒரு கையெழுத்தால் லட்சக்கணக்கான பெண்களின் தலையெழுத்து மாறியது. அனைவருக்கும் சமமான கல்வி சென்றடைய வேண்டும். இந்தியாவில் கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. கல்வி எல்லாரையும் சென்றடைய திராவிட இயக்கத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்கு உருவானதுதான் திராவிட இயக்கம். நாடு செழித்து தன்னிறைவுடன் இருப்பதற்கு கல்வி மிகவும் அவசியம் என முதலமைச்சர் பேசினார்.

பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர். பெண்களின் உரிமைக்காக போராடியவர் ராமமிர்தம் அம்மையார் என்பதால் புதுமைப்பெண் திட்டத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் மகளிர் சுய உதவிக்குழு உருவாக்கப்பட்டது. பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுவரை 1.16 லட்சம் மாணவர்கள் புதுமைப்பெண் திட்டத்தால் பயனடைந்துள்ளதாக பெருமுதம் தெரிவித்த முதல்வர், படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு கவனச்சிதறல் இருக்கக்கூடாது. நிதிநிலை நெருக்கடி இருந்தாலும் இதுவரை அறிவித்த 85 சதவீதம் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறினார். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததை செய்யும் அரசுதான் திராவிட மாடல் அரசு எனவும் முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: